Mahasankara Matrimony







HAPPY MOTHER'S DAY. THIS IS MY GOLDEN MEMORY ABOUT MY MOTHER.

10/05/2020
இன்று காலை குரோம்பேட்டை அருகே நெமிலிச்சேரியில் என் மூத்த சகோதரியின் இல்லத்தில் தங்கி இருக்கும் என் தாயாரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். வயது எண்பது ப்ளஸ்.

நாளை மறுநாள் என் தாயாருக்குப் பிறந்த நாள் (பங்குனி பூரட்டாதி. இதே தினம்தான் என் மகளுக்கும் பிறந்த நாள். பாட்டிக்கும் பேத்திக்கும் ஒரே நாள்.). அவருக்குத் தருவதற்காக அஸ்தினாபுரத்தில் ஒரு கடையில் மதுரை சுங்கிடிப் புடவை வாங்கிச் சென்று கொடுத்து, நமஸ்கரித்தேன்.

நான் கொடுத்த புடவையை வாங்கியதும், தாயாரின் கண்கள் பனித்து விட்டன. எத்தனை பேர் விலை உயர்ந்த புடவைகளை வாங்கிக் கொடுத்தாலும் மகனோ, மகளோ வாங்கிக் கொடுக்கும் புடவை என்றால் அது தாயாருக்குத் தனி சுகம். அதுதான் பாசம். கண்களில் பிரகாசமும் கண்ணீரும் மிளிர, புடவையைக் கைகளிலேயே வைத்து அழகு பார்த்துக் கொண்டிருந்தார்.

அதோடு, நெகிழ்வான சம்பவம் ஒன்றை என் தாயார் அப்போது நினைவு கூர்ந்தார். ஆனால், எனக்கு அது அவ்வளவாக நினைவில் இல்லை. ஆனால், தாயார் உருக்கமாகச் சொல்லச் சொல்ல... எனக்கும் அந்த நிகழ்வு நினைவுக்கு வந்து என் கண்கள் கலங்கி விட்டன.

அந்த சம்பவம் இதுதான்:

இது நடந்தது 1988-89-ஆக இருக்கலாம். நான் சென்னைக்கு வந்த புதிதில் விகடனில் வேலை பார்த்தேன். அப்போது மயிலாப்பூரில் நடுத் தெருவில் (பயப்பட வேண்டாம். தெருவின் பெயரே இதுதான்) குடி இருந்தேன். தாயாரும் நானும் மட்டுமே வாசம்.

என் தாயாருக்கு அப்போது ‘ஃபிட்’ என்று சொல்லப்படும் இழுப்பு (கால்களில்) சில நேரங்களில் வரும். இழுத்துக் கொண்டிருக்கிற கால்களைக் கட்டுப்படுத்த முடியாது. அந்த சோகமான தருணங்களில் அவர் அவஸ்தைப்படுவதைப் பார்த்தால், மனம் அப்படி வேதனைப்படும். பல நேரங்களில் தனக்கு இழுப்பு வந்தது எனக்குத் தெரியக் கூடாது என்பதற்காக புடவையால் தன் காலை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு வேதனையை வெளியே காட்டாமல் சமாளித்துக் கொண்டிருப்பார். இப்போது அதை நினைத்தாலும் மனம் ‘பகீர்’ என்கிறது.

அது ஒரு போகிப் பண்டிகை தினம். வீட்டில் போளி, வடை எல்லாம் என் அம்மா ஒருத்தியே தயார் செய்து நான் சாப்பிடுவதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்.

இலை போட்டு எனக்குப் பரிமாறத் துவங்குகிற வேளையில் திடீரென்று தாயாரின் கால்களில் இழுப்பு வந்து விட்டது. உடனடியாக எழுந்து தாயாருக்கு உதவினேன். ஆனாலும், இழுப்பு நின்றபாடில்லை. தொடர்ந்து இழுத்துக் கொண்டே இருக்கிறது. அந்த வேதனையிலும் தன வலியை மறந்து 'நீயே எடுத்துப் போட்டுண்டு சாப்பிடுடா' என்று சாப்பிடச் சொல்கிறார்.

கண்களுக்கு நேரே வலியால் தாயார் துடித்துக் கொண்டிருக்கும்போது எந்த மகனுக்கு சாப்பிட மனம் வரும்? 'அதெல்லாம் இருக்கட்டும்மா... உடனே ஆஸ்பத்திரி போவோம். இந்த இழுப்பு நிக்கிற வழியா தெரியலை' என்று கண்கள் கலங்க வீதிக்கு வந்து ஒரு ஆட்டோவைப் பிடித்தேன்.

என் தாயாரை ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அட்மிட் செய்து, பிற்பாடு அவர் சரியாகிப் போனது வேறு விஷயம்.

இந்த விஷயத்தைத்தான் தாயார் நினைவு கூர்ந்தார். பிறகு சொன்னார்: ‘அன்னிக்கு போகிப் பண்டிகைக்காக நான் செஞ்ச போளியையும், வடையையும் நீ சாப்பிடவே இல்லடா... உனக்கு இதெல்லாம் புடிக்குமேனு ஒரு நாளும் கிழமையுமா ஆசை ஆசையா செஞ்சு வெச்சேன். என்னை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போற மும்முரத்துல நீ சாப்பிடவே இல்லைடா... சாப்பிடவே இல்லை’ என்று குரல் கமறச் சொல்லி, இன்று விசும்பி விசும்பி அல ஆரம்பித்தார்.

என் அக்காவும் தேற்றினார். நானும் தேற்றினேன். அவ்வளவு எளிதில் சமாதானம் ஆகவில்லை. பிறகு, அந்த சூழ்நிலையை மாற்றுவதற்கு, ‘விடும்மா... அதுக்குப் பிறகு வீட்டுலயும் வெளிலயும் அடிக்கடி போளி தின்னுண்டுதான் இருக்கேனம்மா’ என்று சொன்னதும் அனைத்தையும் மறந்து சிரிக்க ஆரம்பித்தார்.

‘அம்மா’ என்கிற உறவுக்கு ஈடு இணை உலகத்தில் எதுவுமே இல்லை.

அனைத்து தாயார்களுக்கு இது சமர்ப்பணம். என் நமஸ்காரம்.

பெரியவா சரணம்.

அன்புடன்,
பி. சுவாமிநாதன்

* இது நடந்து பல வருடங்களுக்கு மேல் இருக்கும். தாயார் இறைவனடி கலந்து நான்கு வருடங்கள் ஆகி விட்டன.